Loading

Monday, October 31, 2011

யார் தமிழன்??

இன்றைய நவீன ,சுயநலம் பெருத்துவிட்ட உலகில் ,நம்மை நாமே கேள்விகேட்டுக் கொண்டால் விழும் பதில்களை,கீழே தெரிவித்திருக்கிறேன்!
யார் தமிழன்  ?

பழம்பெருமைகளை எல்லாம் கடாசி விட்டு மேற்க்கத்திய மோகத்தில் அலைந்து திரிகிறவன் எவனோ ? ,அவன்தான்

யார் தமிழன்  ?

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நேரத்திலும், ஏர்கூலரில் காற்று வாங்கிக்கொண்டே "மழை விட்டும் தூவானம் விடவில்லை "என்ற  வசனத்தை உதிர்த்தவன் எவனோ ? அவன்தான்

யார் தமிழன்  ?

தமிழர்கள் சாகிறார்களே என கேட்டதற்கு ,போர் என்றால் சில அப்பாவி மக்கள் மடிவதும் இயல்பான விசயம்தான் ,என பொட்டில் அறைந்தார் போல் சொல்லத்தெரிந்தவள் எவளோ ? அவள்தான்  


யார் தமிழன்  ?



நம் கருத்திற்கு, எவன் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவனை ஆரிய இனமென்றும்,பார்ப்பன வகையை சேர்ந்தவன் என்று உடனே தீர்ப்பு சொல்பவன் எவனோ ? அவன்தான்



யார் தமிழன்  ?

மூன்று தண்டனைக்குரிய தமிழர்களை காப்பாற்ற ,தூக்கு தண்டனை வேண்டாமென முழங்கியதோடு அல்லாமல் ,ஒரு பகுதி தமிழர்களை கொன்றொழிக்க காரணமாக இருந்த அரக்கன் ராஜபக்ஷேவுக்கும் தூக்கு வேண்டாமென புதிய வழிமுறையை சொல்பவன் எவனோ ? அவன்தான் 

யார் தமிழன்  ?


தமிழனின் பெருமையை பற்றி திரைப்படம் எடுத்தால்,அதனை உலகதரத்திற்கு எடுத்துச் செல்ல முனையாமல் ,அந்த தமிழரையே கிண்டலடித்து ,படைப்பையும் மட்டம் தட்டுபவன் எவனோ ? அவன்தான் ........!




Sunday, October 16, 2011

உள்ளாட்சிதேர்தல், ஒரு கடைசிப் பார்வை!


தமிழகத்தில் உள்ளாட்சிதேர்தலின் கடைசி கட்ட பிரச்சாரம் நேற்றுடன் முடிந்து ,நாளை முதல் ஒட்டுப்பதிவு ,இருகட்டங்களாக நடைபெறவிருக்கிறது !
எல்லா முக்கிய கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் ,எந்த கட்சி பலம்வாய்ந்த கட்சி என்பது  வாக்கு எண்ணிக்கையில்  தெரிந்துவிடும் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது !

பொதுவாக ஆளும்கட்சிக்குத்தான் உள்ளாட்சிதேர்தல் சாதகமாக அமையும் என்றொரு பேச்சு நிலவுகிறது, அடிதடி அராஜகமென பல உள்ளாட்சித்தேர்தலை மக்கள் பார்த்துள்ளதால், வாக்கு சதவிகிதம் எப்படி அமையப்போகிறது என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற விஷயம் !

ஓட்டுக்காக பணம் கொடுப்பது, குடிமகன்களுக்கு நிதமும் சரக்கு பாட்டில்களை தவறாமல் வினியோகிப்பதென, பெண் வேட்பாளர்களும் ,ஆண் வேட்பாளர்களும் போட்டிபோட்டுகொண்டு செலவழித்து வருகிறார்கள் ! சில வேட்பாளர்கள் தோற்று விடுவோம் என்ற தயக்கத்தில் வெறும் பிட்நோட்டிஸ் மட்டுமே விநியோகித்து கடமையை முடித்திருக்கிறார்கள்
மதிமுக ,பாமக ,விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகளில், போட்டியிட ஆள் கிடைக்காமல் இருந்ததை பல இடங்களில் காண முடிந்தது !


பல கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏல முறையில் முன்பே தீர்மானித்து விட்டார்கள் !மற்றொருபுறம் ஓட்டுக்கு மூவாயிரம் வரை பணம்செலவழிக்கிறார்கள் !(இப்படி செலவுசெய்வது நாட்டுக்கு நல்லது செய்யவா என்று நீங்கள் அப்பாவியாக கேள்வி கேட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல !)எனினும் கட்சி ரீதியாக பார்த்தால் பல அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி ,முதல் மூன்று இடத்தை முறையே ஆதிமுக ,திமுக ,தேமுதிக கட்சிகள் கணிசமான இடங்களைப் பெறும் என்று கணித்திருக்கிறார்கள் !

இதில் பதிவாகும் வாக்குகள்தான் பாமக,தேமுதிக ,விடுதலைசிறுத்தைகள் ,மதிமுக போன்ற கட்சிகளின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிக்கப் போகிறது என்பதால் ,அந்த கட்சிகளும் கொஞ்சம் பயத்துடன் இருக்கின்றன !இந்த வாரம் அவர்களின் வண்டவாளம் தெரிந்துவிடும் !

பிரபலமான பதிவுகள்