Loading

Monday, November 28, 2011

மாறுபடாத காதல் கதை !


ல்பனாவை இன்றுதான் பார்த்தேன் .திருநெல்வேலியில் சுலபமாக, அறியப்படாத தெருவில் தற்செயலாக,அவளை பார்க்க
நேர்ந்தது !

,ஆமாம் ,அதே கல்பனாதான் .முன்பொரு நேரத்தில் என் உயிராய் இருந்த அதே கல்பனாதான்.
கல்லூரியில்தான் முதன்முதலில் அவளைப் பார்த்தேன் .ஒடிசலான தேகம் சராசரி தமிழ் அழகு அவளிடம் தங்கியிருந்தது.  மௌன அவதாரத்தில் மட்டுமே அடிக்கடி காட்சி தருவாள் !அதிர்ந்து பேசாத பெண்களை எல்லாருக்கும் பிடித்துப்போவதுபோல், எனக்கும் கல்பனாவை சுலபமாக பிடித்துப்போனது.ஒரு சுப வேளையில் ,என் பிரியத்தை
அவளிடம் வெளிப்படுத்தினேன்..சில நாட்கள் மவுனத்திற்கு பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தாள்.
சகஜமாக பேசினாளே தவிர எனக்கு சாதகமாக பேசவில்லை ..ஒரு செமஸ்டர் விடுமுறையின் முதல் நாளில் ..

உன்னை எனக்கு பிடிக்குது ரவி என்ற உரைநடையை
புதுக்கவிதை வடிவில் சொன்னாள்.

அப்படிப்பட்ட கல்பனாவைத்தான் இன்று தெருமுனையில்,ஒரு குடம் தண்ணிக்காக அவள் அல்லல்பட்டுக் கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது .என் அலுவலக வேலை விசயமாக ஒருவரை பார்க்க வந்த தருணத்தில் ,இந்த கசப்பான உண்மையை காண முடிந்தது !

காதலின் எல்லை எதுவோ ,அதற்கு மிக அருகில் சென்றது போல், கல்பனாவை அன்று காதலித்தேன் .ஒரு மழை காலத்தில் அவள் நனைந்துகொண்டே கல்லூரிக்கு வந்த
நாளிலிருந்து  ,ஒரு வார காலமாய் காய்ச்சலில் அவதிப்பட்டு கிடந்ததாள்..எந்தக் காதலனும், காதலிக்கு காய்ச்சல் என்றால் ,கொஞ்சமேனும் துடிக்காமலா இருப்பான்?

..நானும் துடித்தேன் ..துடித்ததோடு இல்லாமல் ,அவளுக்கு பிடித்த ஊதா நிறத்தில் ,ஒரு அழகிய குடையை பரிசளித்தேன் ..பிறிதொரு நாளில் கல்பனாவின் அப்பாவுக்கு காதல் விஷயம் தெரிந்து ,கல்பனாவை விஷ வார்த்தைகளால் வாட்டி எடுத்தார்கள் ..

இந்த நேரத்தில் ,இந்திய காதலன்கள் என்ன சொல்வார்களோ ,அதைத்தான் நானும் சொன்னேன் .வீட்டை விட்டு என்னுடன் வா ? என அழைத்தேன் ..கல்பனாவின் நேர்மை புத்தி அதற்க்கு தடை போட்டது ..கண்டிப்பாக காதல் ஜெயிக்குமென நம்பினாள்..

நம்பிக்கைதான் வாழ்க்கை என நம்பியவள் ,அவள் அப்பாவின் மாஸ்டர் பிளான் தெரியாமல் வெகுளியாக இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .ஒரு கொடும்வேளையில்
சத்தமில்லாமல் ஒரு மாப்பிள்ளையை ,கல்பனாவுக்கு பார்த்து கல்யாணத்தையும் முடித்துவிட்டார்கள் ..எதிர்க்க எனக்கு திராணி இருந்தும் எதிர்க்காமல் போனதின் காரணம்
"கல்பனாவின் மவுனத்தை தவிர வேறொன்றுமில்லை "!

அப்படிப்பட்ட கல்பனாவின் வாழ்க்கை,இன்று  எப்படி போகிறதென்ற கேள்வியாவது? கேட்டுவிடலாமே என கல்பனாவின் திசை நோக்கி நடந்தேன்.

 .என்னை பார்த்த கணத்தில் ,கல்பனாவின் முகம் ,ஆச்சர்யம் கலந்த குழப்பமானது .என்னை வரவேற்று வீட்டுக்கு வரச்சொன்னாள்.
எப்படி இருக்கிறாய்? என்ற சம்பிரதாய கேள்வியை கேட்டேன்
,நல்லா இருக்கேன் ரவி

,நீ எப்படியிருக்க ?

 கல்யாணம் ஆகிடுச்சா ?

 எத்தனை குழந்தையென கேள்வியை அடுக்கினாள்

 .. இன்னும் கல்யாணம் ஆகலை கல்பனா என்றேன்.

அவளின் கணவர் பற்றி கேட்டேன் .
.நல்லா இருக்கார்,எல்ஐசி ஏஜென்ட்ட்டாக இருக்கிறார் என்றாள்

 ..தொட்டிலில்  குழந்தை ஒன்று தெரிந்தது , ஆணா ? பெண்ணா ? என கேட்டேன் ,

 பெண் குழந்தையென சொல்லிவிட்டு குழந்தையை என்னிடம் கொடுத்தாள்..கல்பனாவின் முகச்சாயலை ஓரளவு என்னால் கணிக்க முடிந்தது ! சந்தோசமாகத்தான் இருக்கிறாள் என கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தது ..இதற்கு மேலும்,அவள் வீட்டில் இருந்து சங்கடம் கொடுக்கவேண்டாமென எண்ணி ,

சரி கல்பனா நான் இன்னொரு நாள் வர்றேன் என்றேன்.

கண்டிப்பா வரணும் ரவி, என சொன்னாள் .

சரியென சொல்லிவிட்டு கனத்த மனதுடன் திரும்பினேன் ..கல்பனா இன்னும் என்னை மறக்கவில்லை என்பதை அவள் வீட்டுச் சுவற்றில் ,நான் பரிசளித்த ஊதா நிற குடை, சொல்லாமல் சொல்லியது !

4 comments:

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்